பேரலைகள் கரையேறி கதைகள் சொல்லும்
பெருந்தோப்பு பக்கத்தில் காற்றனுப்பும்
ஊர்நடுவே உயர்வுண்டு மாதா கோவில்
உச்சியிலே புறாக் கூட்டம் குறுகுறுக்கும்!
சாலையிரு புறந்தன்னில் சந்தை உண்டு
சமத்துவந்தான் நிலைத் தங்கு நின்றிருக்க
வேளாங் கண்ணி வந்தடைவோர் கூட்டம் நாளும்
விகற்ப மின்றி குழுவாவார் விந்தை விந்தை!
திருப்பலி அறிவிப்பு திசைகள் தோறும்
தெள்ளுதமிழ் மொழிமூலம் வந்து சேரும்
வருவோர்க்கு வழிகாட்ட வருவார் பலரும்
வண்ணதமிழ் ஒலியங்கு வாச மேந்தும்!
அலைமோதும் கூட்டத்தார் அடைக்கல மாதா
உளங் கசியும் பார்வையிலே உருகி நிற்க
நலங்கூட அருள் தரும் காட்சிகாண்போம்
நன்மக்கள் பேறுபெற்று மகிழு வாரே!
No Comment! Be the first one.